×

மது வாங்கியதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் டாஸ்மாக் ஊழியருக்கு பீர் பாட்டில் அடி

பொன்னேரி, மார்ச் 5: பொன்னேரி அருகே மதுவாங்கியதற்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர், டாஸ்மாக் ஊழியரை பீர்பாட்டிலால் சரமாரியாக தாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளார். பொன்னேரி அடுத்த தேவனாஞ்சேரி பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் பாபு (45) என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பொன்னேரி பகுதியை சேர்ந்த ஓவியன் (35) என்பவர் அங்கு மது வாங்க வந்தார். பின்னர் அவர் மது வாங்கிக்கொண்டு பணம் தர மறுத்தார்.

அதிர்ச்சியடைந்த பாபு பணம் தருமாறு கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஓவியன், விற்பனையாளர் பாபுவை பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கினார். அவருக்கு தலையில் ரத்தம் கொட்டியது. இதை பார்த்த சக குடிமகன்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தலையில் பலத்த காயமடைந்த பாபுவை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதையடுத்து மது கடை மூடப்பட்டது. இதனால் குடிமகன்கள் வேதனையில் திரும்பினர். இதனையடுத்து, விற்பனையாளர் தாக்கிய வாலிபரை கைது செய்யும் வரை அரசு மதுக்கடை திறக்க மாட்டோம் என்று ஊழியர்கள் கூறினர். இதுகுறித்த புகாரின்பேரில் தலைமறைவான ஓவியனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED பெரியபாளையம் அருகே பல மாதங்களாக...